ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பாரபட்சத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது

சாதி மற்றும் மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் வகையில் காவல்துறையினர் பயிற்சியளிக்கப்படுகிறார்களா?

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தான் எவ்வாறு தலித்துகள் மீது பொய் வழக்குகளை தொடுத்தேன், முஸ்லிம்களை துன்புறுத்தினேன், மராத்தாக்களை பாதுகாத்தேன் என்று பீற்றிக் கொண்ட இந்திய காவல் பணி (இகாப) அதிகாரி பாக்யஸ்ரீ நவ்டேக்கின் காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் தீயாய் பரவிய பிறகு மகாராஷ்டிரா அரசு அவரை பீட் மாவட்டத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றல் செய்துள்ளது. நிர்வாக அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் பணியிடமாற்றல் செய்வது என்பது தண்டனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அரசாங்கங்களும், அரசியல்வாதிகளும் அதிகாரிகளின் பணியிடமாற்றலை தங்களுக்கு பிடிக்காத அதிகாரிகளை தண்டிக்க மற்றும் சில அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரும்போது அவர்களை திருப்திபடுத்த என இரண்டு வழிகளிலும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தன்னைப்பற்றி நவ்டேக் பீற்றிக்கொண்ட கூற்றுகள் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் மீது அவருக்குள்ள வெறுப்பை காட்டுகின்றன. இந்த விவகாரத்திலிருந்து இரண்டு அம்சங்கள் எழுகின்றன: பணிடமாற்றமானது நவ்டேக்கின் (காணொளியில் பார்த்த) சாதிய, மதவாத வெறுப்புப் பார்வையை மட்டுப்படுத்துமா? பயிற்சிக் கையேடுகள் இருந்தபோதிலும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிளும் தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தை பீடித்துள்ள பாரபட்சங்கள் மற்றும் வெறுப்புணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா?

     பிற அதிகாரவர்க்க நிறுவனங்களைப் போலவே காவல்துறையும் சாதி, வகுப்புவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றையொட்டி கட்டப்பட்டுள்ள ஆதிக்க சித்தாந்தத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டே இருக்கிறது என்பதை புரிந்துகொள்வது என்பது கடினமான விஷயமல்ல. காவல்துறை மிக ஆழமாகவே ஆணாதிக்கம் கொண்டதாகவும், சமூகத்திலுள்ள பலவீனமான பிரிவினரான பெண்கள், ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோரை பாகுபாட்டுடன், பாரபட்சத்துடன் நடத்துகிறது என்ற ‘’பெருமை’’யைக் கொண்டதாகவும் இருக்கிறது.

     சமூக-பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா ‘’முற்போக்கான’’ மாநிலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களில் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரைச் சேர்ந்தவர்களை தான் நடத்திய விதம், பின்பற்றிய முறைகள் ஆகியவற்றைப் பற்றிய அந்தப் பெண் காவல் அதிகாரியின் நீண்ட வக்கிரப் பேச்சு இன்று அந்த மாநிலம் உள்ள நிலையுடன் நன்கு ஒத்துப்போகவே செய்கிறது. சமீபத்திய வரலாற்றுடன் தொடங்குவது என்றால், 2006 கைர்லாஞ்சி படுகொலை முதல் பீமா-கோரிகான் நிகழ்வு வரையிலான தலித்துகளுக்கு எதிரான பல்வேறு வன்முறை செயல்கள், சமூகத்தின் இந்தப் பிரிவினருக்கு எதிராகவே காவல்துறை நடந்துகொள்கிறது என்ற அழுத்தமான எண்ணப்பதிவை ஏற்படுத்துகிறது. மீண்டும், 2016ல், அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் (வன்முறை தடுப்பு) சட்டம் 1989ஐ நீக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து மராத்தா சமூகம் நடத்திய அமைதிப் பேரணிகளின் போது தலித்து சமூகத்தின் மீதான வன்முறை, தீவைப்பு தொடர்பான வழக்குகளில் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்து பல புகார்கள் செய்யப்பட்டன, மும்பை உயர் நீதிமன்றத்திலும் மனு செய்யப்பட்டது. உத்திர பிரதேசத்தில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், குற்றச்சாட்டிற்கு ஆளானவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து ஆக்ரோஷமாகவோ அல்லது தண்மையாகவோ காவல்துறையினர் நடந்துகொள்கிறார்கள். திட்டமிட்டு செய்யப்படும் துப்பாக்கிச்சூடுகளான காவல்துறை ‘’என்கவுண்ட்டர்கள்’’, இளஞ்சோடிகளை, குறிப்பாக இந்து-முஸ்லிம் காதல் ஜோடிகளை பொதுவிடங்களில் அனைவருக்கும் முன்னால் அவமானப்படுத்தும் ரோமியோ படைகள், ‘’காதல் ஜிகாத்’’ என்று சொல்லப்படுவதற்கு எதிரான விஷம்தோய்ந்த பிரச்சாரம், பசுக்களை கடத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறவர்களை அடித்துகொல்வது ஆகிய அனைத்தும் அந்த மாநிலத்தில் காவல்துறையானது பெரும்பான்மையான மக்களின் போக்குகளுக்கு ஏற்றாற்போல் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகிறது. கார்ப்போரேட் கம்பெனி நிர்வாகி ஒருவர் ஆயுதங்கள் ஏதும் வைத்திராத நிலையில் லக்னோவின் சுட்டுக்கொல்லப்பட்டதில் அதில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற காவலர்கள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மாநிலம்தான் ஹஷிம்புரா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் பார்த்தது. மாநில ஆயுதப்படை காவலர்கள் 42 முஸ்லிம் ஆண்களை வேண்டுமென்றே சுட்டுக்கொன்று அவர்களது உடல்களை கால்வாய்களில் வீசியெறிந்து 31 ஆண்டுகளான பிறகு இந்தத் தீர்ப்பு வந்தது. இந்தப் படுகொலை ‘’சட்ட அமலாக்கத் துறைகளில் நிறுவன ரீதியான சார்பு இருப்பதை காட்டுகிறது’’ என டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

தனியார் இடங்களில் வன்முறைச் செயல்கள் நடக்கிறபோதும், பொது சட்ட-அமைதி குலைகிறபோதும், கலவரங்கள் மற்றும் பிற பிரச்னைகளின்போதும் காவல்துறை அமைப்புதான் அமைதியைக் கொண்டுவர, பேச்சுவார்த்தை நடத்த, பிரச்னைகளை தீர்க்க தொடர்ந்து அழைக்கப்படுகிறது என்பதை கருத்தில்கொள்கையில் காவல்துறைதான் அரசின் மிகவும் வெளிப்படையான கரமாக இருக்கிறது. அதன் உறுப்பினர்கள், ஆண் மற்றும் பெண் இரு பாலரும், பொதுமக்களுடன் தினமும் ஊடாடுகின்றனர். காவல்துறை நட்பாகவும், ‘’சேவை’’ செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் காட்ட அடிக்கடி பொதுமக்கள் தொடர்பு பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் இவர்கள் சேவை செய்யும் சமூகங்களும், பகுதிகளும் காவல்துறையை எப்படிப் பார்க்கின்றன? பல மதங்களைக் கொண்ட இந்தியா போன்ற பன்மைத்துவ சமூகத்தில் பன்மைத்துவத்தை கையாள எந்த அளவிற்கு காவல்துறை தயார் செய்யப்பட்டுள்ளது? அதை விட முக்கியமாக, அவர்களிடம் உருவாகும் சார்புகள், பாரபட்சங்கள் ஆகியவற்றைக் கையாள அவர்களது பயிற்சி எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது?

காவல்துறை சீர்திருத்தம் என்பது பல முறை விவாதிக்கப்பட்ட விஷயம், ஆனால் மாநில அரசாங்கங்கள் அதில் ஈடுபட்டது என்பது மிக அபூர்வம். 1978ல் தேசிய காவல்துறை குழு செய்த பரிந்துரைகள் முதல் 1995ல் உச்ச நீதிமன்றத்தில் உத்திர பிரதேசத்தின் முன்னாள் காவல்துறை இயக்குனர் தொடுத்த பொது நல வழக்கு (இன்னமும் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது), 1998ல் ஜூலியோ ரிபைரோ குழு மற்றும் அதைத் தொடர்ந்து பத்மநாபையா, மலிமத், சோலி சொரப்ஜி ஆகியோரின் குழுக்கள் அளித்த பரிந்துரைகள் வரை பரிந்துரைகளுக்கு பஞ்சமேயில்லை. 2006ல் உச்ச நீதிமன்றம் ஆறு வழிகாட்டுதல்களை நிறைவேற்றியது. காவல்துறை பயிற்சியானது ‘’இந்தியா போன்ற பன்மைத்துவ நாட்டில் காவலர் பணிக்கு தெரிவு செய்யப்படுகிறவர்கள் காவல் பணியில் மக்களாட்சி நெறிகளை பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும்’’ என அவற்றில் நான்காவது வழிகாட்டுதல் கூறுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் முற்றிலும் தோல்வியே ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்கள் நிறைவேற்றியுள்ள மாதிரி காவல் சட்டமானது (மாடல் போலீஸ் ஆக்ட்) சில சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. ஆனால் இத்தகைய தனிப்பட்ட சட்டங்களால் பலனில்லை. சமூகத்திலுள்ள பாரபட்சங்களை, முற்சார்புகளை களைய நீண்ட காலமாகும். ஆகவே இத்தகைய சமூக பாரபட்சங்களுக்கு எதிராக செயல்படும் வகையில் காவல்துறை பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

Back to Top