அதிகாரம் பசையாக இருக்கும் போது
சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தல்கள் மூன்று வித்தியாசமான கதைகளைச் சொல்கின்றன.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களிலிருந்து ‘‘மையநிலத்தை’’ சேர்ந்தவர்கள் கற்பதற்கு ஏதாவது ஒரு பாடம் இருக்கிறதென்றால் அது பொதுமைப்படுத்துதலை தவிர்க்க வேண்டும் என்பதுதான். பாரதீய ஜனதா கட்சியானது 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியிலிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (மார்க்சிஸ்ட்) தீர்மானகரமாக தோற்கடித்ததின் அடிப்படையில் வட கிழக்கு முழுவதும் ‘‘காவி மயம்’’ ஆகிவிட்டதாக இந்தியாவின் மையநீரோட்ட ஊடகங்கள் புகழ்ந்து எழுதின. ‘‘வடகிழக்கு’’ பகுதி என்பது ஏழு தனிப்பட்ட (இப்போது சிக்கிமையும் சேர்த்து எட்டு) வெவ்வேறு விதமான அரசியல், கலாச்சார, வரலாற்று அம்சங்கள் கொண்ட மாநிலங்கள் என்பதை இந்தப் பகுதியைப் பற்றி ஊடகங்கள் எழுதுகிற போது வழக்கமாக மறந்துவிடுவதைப் போலவே இந்த முறையும் மறந்துவிட்டன. இவை அனைத்தையும் ஒன்றாக பாவிப்பது என்பது அவற்றின் தனித்த அடையாளங்களை மறுப்பதாகும். சொல்லப்போனால் ‘‘மையநிலத்தை’’ சேர்ந்தவர்களின் இந்தப் போக்கு, அதாவது அவர்கள் அனைவரையும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாகக் கருதி விளிம்புப் பகுதிக்குத் தள்ளுவது வடகிழக்கு மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிரான உணர்வு என்ற விஷயம் ஒரு பக்கமிருக்க திரிபுராவிலுள்ள இந்துக்களில் பெரும் பகுதியினர் பாஜகவின் செயல்திட்டங்களுக்கு செவிசாய்த்ததாலேயே அங்கு பாஜாகவிற்கு வெற்றி கிட்டியது. கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள மலை மாநிலங்களில் கதை முற்றிலும் வேறு. போதுமான அளவிற்கு இடங்களை வென்று தனித்து ஆட்சியமைக்கும் திரிபுராவில் கூட பழங்குடியினருக்கு தனி மாநிலம் கோரும் திரிபுர உள்நாட்டு மக்கள் முன்னனி என்ற உள்ளூர் கட்சியுடன் கூட்டு வைத்தே பாஜக இதை சாதித்துள்ளது. இந்த உள்ளூர் கட்சி ஆட்சியில் இளைய பங்குதாரர்தான் என்றாலும் ஆளும் கட்சிக்கு முள்ளாய் உறுத்தும். மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக வேறு வழியின்றி அதன் தனி மாநில கோரிக்கையை ஏற்கும்.